.

Monday, May 30, 2016

தோழர் பட்டாபி
புகழ் நிறை பணி நிறைவு

ஆஜானபாகுவான நெடிய உருவம் இல்லை
சற்று உயரம் குறைவுதான், லெனின் போல!
மார்க்ஸ் போல ஊடுருவும் கண்கள், பேச்சுபாணி எல்லாம் எங்கள் ஜெகன்!
ஆழ்ந்த மார்க்ஸிய பிடிப்பு, தொடர்ந்து அறிவை விரிவுசெய்யும் உழைப்பு!
எதிராளியை எடுத்தெறிந்து பேசாத பண்பு, அனைவரையும் மதிக்கும் மாண்பு!
தம் கருத்தை உறுதியாய் எடுத்து வைக்கும் பான்மை,
தன்னை முன்னிறுத்தாது இயக்கத்தை மேல் நடத்தும் தகைமை !
பதவியை மலர்க்கிரீடம் என எண்ணாது, பொறுப்பு எனக் கருதும் பதைப்பு !
அதனால் அன்றோ காலம் நேரம் பார்க்காத கடும் உழைப்பு !

                தமிழ் மாநிலம் எங்கும் பயணம்கூட்டங்கள்-- தோழர்களோடு உரையாடல் -- உற்சாக மூட்டல் -- இயக்கத்தை எஃகென ஆக்க தோழர்களை வளர்த்தெடுத்தல்--  சாதாரணமானவர்கள் என எவருமில்லை என சகஜமாய் எவரோடும் தோள் அணைக்கும் தோழமை !

          மத்திய சங்கத்துடன் ஆலோசனை -- முன் வைக்கும் யோசனைகள் தான் முன்மொழிந்தது என தம்பட்டம் அடிக்காமை -- பிரச்சனைகளின் அடிவேர் தொட்டு தீர்த்து வைக்கத் திட்டமிடல் -- வரும் பொருள் இதுவெனச் சுட்டும் தொலைநோக்குப் பார்வை -- மறைபொருளாய் உளம் மறைக்கும் தற்சார்பு இலக்கு கொண்டிராதான், எடுத்து வைக்கும் வாதங்களால் தேசிய கூட்டாலோசனை போன்ற கூட்டங்களில் அதிகாரிகளின் மலைப்பு !

          இத்தனைக்கும் மத்தியில் ஓயாத படிப்பு ஒலிக்கதிர், இணையத்திற்கென இரத்தினமாய் எழுத்துப் பணி அதிகம் படித்தால் வந்திடுமோ கர்வம், மற்றவர்களிடம் அன்னியப்பட்டு தோழமையில் ஏற்படுமோ பங்கமென பயந்து ஆமையெனச் சுருங்கும் அடக்கம்
எமக்கு எங்கள் சங்கத்திற்குத் தவமாய் கிடைத்த வரம் !
தொழிலாளர்கள் மாதமாம் மே மாதத்தில் பிறந்து மே 31 ம் தேதி இலாக்காப் பணி -- அழுத்தமாய்ச் சொல்கிறோம் இலாக்கா பணியைத்தான் -- பல்வேறு அனுபவங்களோடு நிறைவு செய்கிறார் பட்டாபி  ! கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துவோம்,  
தொடர வேண்டும் அவரின் இயக்கப் பணி, சிட்டாய் சிறகடித்து வான் சிவக்க!
  
சிம்புட் பறவையே! சிறகை விரி! எழு, பற, மேலே மேலே!”
வாழ்த்துகிறோம் ! தோழர் ஞானையாவின் வார்த்தைகளால்
ஆரூரார்  -- மார்க்சிய அறிஞர்  D. ஞானையா

தோழர் ஆர். பட்டாபிராமன் இன்று ஆரூரார் என்றே அறிமுகமாகிவிட்டார்இவர் ஓர் படைப்பாளி. அறிவாளி. எழுத்தாளர். சமூகவியலாளர். புரட்சிகர சிந்தனையாளர். மார்க்சிய அறிஞர். தொழிற்சங்கப் போராளி என்ற வகையில் இன்று தான் விரும்பி ஏற்றுக்கொள்ள இயலாத தொழிற்சங்கப் பொறுப்பாளராக என்.எப்.டி..யின் மாநிலச் செயலர் எனும் சுமைதாங்கி ஆகியுள்ளார்அதிலும் (தேர்தலில்) தோல்வியைத் தழுவிவிட்ட மகத்தான பாரம்பரிய அமைப்புக்கு ஒரு நெருக்கடியான சூழலில் அதன் பாதுகாவலனாக, கொத்தனாக, மராமத்துப்பணிகளை மேற்கொள்ளும் மேஸ்திரியாகப் பணிக்கப்பட்டுள்ளார்.
          கௌரவத்திற்குரிய பதவிதான்ஆனால் இப்பதவியைப் பெற்றதற்கு இவரைப் பாராட்டுவதா அல்லது அனுதாபம் கலந்த ஆறுதல் சொல்வதா என்று எனக்குத் தெளிவு பெறவில்லைஆனால் ஒன்று மட்டும் எனது உறுதியான நம்பிக்கைமிக வெற்றிகரமான, அடக்க ஒடுக்கமான, நிதானமான, படாடோபமற்ற, டாம்பீகமற்ற,  சுய விளம்பரம் தேடாத, போராட்ட குணம் குன்றாத (Militancy) பேரம் பேசும் திறன் மிக்க  (Negotiating skill) சிறந்த தொழிற்சங்க இயக்கத் தலைவராக உயர்வார் என்று நம்புகிறேன்.
          பட்டாபி ஒரு சீரிய சிந்தாந்தவாதி. நிறைய படித்து அறிவுத் தேடலில் ஆழத்துடன் ஈடுபடுபவர்அவர் எழுதி வரும் ஆங்கிலம், தமிழ்க் கட்டுரைகள் தரம் மிக்கவை.
எனது இன்றைய வயதை எட்டுவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் அவர் முன்னால் உள்ளதுஇந்த நெடிய பயணத்தில் பயனுள்ள பல அனுபவங்களைப் பெறுவார் என்பதில் ஐயமில்லைஇந்த அனுபவங்கள் அவரை மேலும் மேலும் பண்படுத்தும், முதிர்ச்சி பெறச் செய்யும்அதனால் தான் அவருக்குள்ள திறமை முழுமையாக வெளிக் கொணரப்பட்டு மதிக்கத்தக்க முதிர்ந்த தொழிலாளர் இயக்கத் தலைவராக தேசிய அளவில் பளிச்சிடுவார் என்பதெனது எதிர்பார்ப்பு !“
(2007 ல் திருவாரூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு TTUC
வெளியிட்ட தோழர் ஆர் பட்டாபிராமன் விழா மலரில் இருந்து)

குறிப்பு: திருவாரூரில் தொலைபேசி இயக்குனராகப் பணியில் சேர்ந்த பட்டாபி, 1979 ல் கூட்டமைப்பை உருவாக்கி அதன் பொதுச் செயலராக 1991 வரை பல பொதுப் பிரச்சனைகளுக்காகப் போராடியவர்)

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என
ஞானத் தந்தை ஞானையாவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி
அவையத்து / போராட்ட களத்து முந்தி இருக்கும்
தோழர் பட்டாபியை வாழ்த்துகிறோம் !


ஒலிக்கதிர் பொன் விழாவைமாவட்டச் செயலர்கள் சிறப்பு கூட்ட அமர்வை , அனைத்து சங்கங்களின்               கூட்டமைப்பு ( FORUM) சார்பில் மாநிலம் தழுவிய கருத்தரங்கைகடலூரில் நடத்த நமக்கு அவர் அளித்த வாய்ப்பைப் பெருமையாய்க் கருதுகிறோம் !

     மிக்க தோழமை மகிழ்வுடன் --- கடலூர் மாவட்ட சங்கம்
செவ்வணக்கங்களுடன் வாழ்த்தி  மகிழும் TMTCLU  மாவட்டச் சங்கம், கடலூர்.