.

Saturday, November 26, 2011

யாரையும் விட்டுவைக்காதே!

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் 51 சதவீத நேரடி அன்னிய 
முதலீட்டை அனுமதிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. சில்லறை 
வணிகத்தில் பன்னாட்டு நிறுவன்ங்களை அனுமதிப்பது நல்லதா என்பதை பார்ப்போம்!


இத்துறையில் கிட்டத்தட்ட 25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் புரளுகிறது. எனவே தான், இத்துறையினை விழுங்குவதற்கு, பன்னாட்டு நிறுவனங்கள் அலைகின்றன. ஆனால், சில்லறை விற்பனை என்பது நமது நாட்டில் கோடிக் கணக்கான சிறு வியாபரிகளின் உயிர் மூச்சு! 

நமது நாட்டு சில்லறை வணிகர்களின் நலனில் சிறிதும் அக்கறை யில்லாத மத்திய அரசு, பல தரப்பெயர் கொண்ட பொருட் களை விற்பனை செய்வதற்கான சில்லறை விற்பனை நிலையங் களை அமைப்பதில் 51 விழுக்காடு நேரடி அந்திய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது;


பல்வேறு அரசியல் கட்சிகள்சிறு வணிகர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, பல தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கதவைத் திறந்து விட்டிருக்கிறது. அது மட்டுமல்ல,  ஒற்றை தரப்பெயர் கொண்ட சில்லறை வணிகத் துறையில் நேரடியாக அந்திய முதலீட்டிற்கான உச்சவரம்பையும் 100 விழுக்காடாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே, உள்நாட்டு பெரு முதலாளிகளின் சங்கிலித்தொடர் விற்பனை மையங்களால், நலிந்துபோன வியாபாரிகள் ஏராளம். இந்த நிலையில், 25 லட்சம் கோடி ரூபாய் பணம் புழங்கும் சில்லறை வணிகச் சந்தை வால்மார்ட்டெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித் துள்ளது மத்திய அரசு. இதனால் சில்லறை வணிகத்தையே நம்பியிருக்கும் சுமார் கோடி சிறு வணிகர்களும், அவர்களை சார்ந்த சுமார் 25 கோடி பேரின் வாழ் வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

மத்திய அரசு விதிக்கும் எல்லா நிபந்தனை களையும், மீறும் சாகசம் 
மிக்கவை பன்னாட்டு நிறுவனங்கள். தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களில் முப்பது விழுக்காட்டை சிறு தொழில் துறையினரிட மிருந்துதான் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற  நிபந்தனையை காற்றில் பறக்கவிட்டு, விதிகளின்  ஓட்டைகளில் புகுந்து கொண்டு, சீனா போன்ற நாடுகளிடமிருந்து மிகக்குறைந்த விலைக்கு பொருட் களை வாங்கி, அதிக விலைக்கு நமது தலையில் கட்டி, கல்லா கட்டுவதில்தான் கருத்தாய் இருப்பார்கள்.  

அமெரிக்காவிலும், கனடாவிலும் கூட, இந்த பன்னாட்டு நிறுவனங் கள் விற்பனை செய்யும் பொருட்களில் மிகப் பெரும்பாலானவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே; அந்த நாடுகளின் தேசியக்கொடி உட்பட! விதிமுறைகளை கடுமையாக அமுலாக்கும் அந்த நாடுகளுக்கே இந்த கதி என்றால், காசுக்காக எது வேண்டு மானாலும் செய்யும் ஊழல்அரசியல் வாதிகளும்-ஊழல் அதிகாரிகளும் மலிந்த நமது நாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?

இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்? கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வாதரம் கேள்விக்குறியாவதோடு, கட்டுக் கடங்கா விலையுயர்வும், பணவீக்கமும் ஏற்படும். வேலையின்மை அதிகரிக்கும். இதன் மூலம் மக்களிடையே, வெறுப்பும்,ஆத்திரமும் மேலிடும். சமூக அமைதி கெடும்!

வெளினாட்டு மூலதனங்களை, இக்காலத்தில் தவிர்க்க இயலாது என்றாலும் கூட, சிறுவணிகத்துறையிலும் பன்னாட்டு பகாசுர கம்பெனிகளை அனுமதிப்பது, நம் நாட்டின் வணிகர்களின் எதிர் காலத்தை இருட்டிலாழ்த்தும். யாரைத் திருப்திப்படுத்த இம் மாதிரி யான முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல!

மக்களை ஏமாற்றுவதற்காக, மிக எளிதாக தப்பிகக்க் கூடிய உதவாக்கரை நிபந்தனைகளை விதித்துள்ளது மத்திய அரசு! பத்து லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில்தான் கடைகளை திறக்கவேண்டும் என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. அந்த மாதிரியான நகரங்களில் சிறு வியாபாரிகளே இல்லையா என்ன? இந்த மாதிரியான ‘பழமான நகரங்கள்தானே அவர்களுக்கு வேண்டும்?


இந்தியாவில் 1000 நபர்களுக்கு, 11 என்றவிகிதத்தில் கடைகள் இருக்கின்றன. இதுபோல 1.2 கோடி கடைகள் இருக்கின்றன. நேரடியாக நான்கு கோடிபேர்கள் இந்த கடைகளில் வேலை செய்கின்றனர். இம்மாதிரியான கடைகளில் 95%  சுயவேலைவாய்ப்பாக கடைகளை அமைத்துக் கொண்டவர்கள்.  நகரங்களில் உள்ள இம்மாதிரியான சிறு வியாபாரிகள் தான்  மிக மோசமாக பாதிக்கப்படப் போகிறார்கள்.  பன்னாட்டு  நிறுவனங்கள் அமைக்கப்போடும் சூப்பர்மார்க்கட்களால், உள்ளூர் வணிகர்கள் துடைத்தெறியப்படப் போகிறார்கள்.  இதுதான அமரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நடந்த்து.

வியாபாரிகள் மட்டுமல்ல, சிறு உற்பத்தியாளர்களும் கூட கடுமை யாகப் பாதிக்கப் படப் போகிறார்கள்.  உதாரணமாக, 20 ஆண்டு களுக்கு முன்னால் , எத்தனைவிதமான சோப்புக் கட்டிகள், சகாய விலையில் கிடைத்தன?. 555, சன்லைட், பொன்வண்டு போன்றவற்றை, சர்ஃப், ரின் போன்றவைகள் வழித்தெறியவில்லை? குழந்தைகள் விளையாடும் உள்ளூர் பொம்மைகளை, சீனத்து பொம்மைகள் வெளியேற்றவில்லை?   


அதாவது, உள்ளூர் மார்க்கட், வெளினாட்டுப் பொருட்களால்  நிரப்பப்படும். இதன் காரணமாக உள்ளூர் உற்பத்தி மூடப்படும்!


திரு மன்மோகன் சிங் எந்த நாட்டுக்கு பிரதம மந்திரியாக இருக்கிறார் என சந்தேகமாய் உள்ளது. பன்னாட்டு நிறுவனங் களின் பணத்தாசைக்காக, நமது நாட்டு சிறு வணிகர்களின் உணவில் மண்ணை அள்ளிப்போடும் அளவிற்கு முடிவெடுக்க  அவருக்கு ஏற்பட்ட நிர்பந்தம் என்ன? 

இந்த முடிவு UPA அரசாங்கத்தின் மக்கள் விரோத போக்கினை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.  திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு, நமது வியாபாரிகளை காப்பதைவிட, அமெரிக்க பெரு முதலாளிகளை காப்பதுதான், முக்கியமாகப் படுகிறது.

மத்திய அரசின் தனது முடிவினை உடனடியாக திருப்பப் பெற வேண்டும் எனக் கோருகிறோம்!

No comments:

Post a Comment