.

Wednesday, August 3, 2011

தமிழ் விழா - 2011

இன்று (03/08/2011) மாலை ஆறு மணிக்கு,  "தோழர் சிரில் நினைவு
அறக்கட்டளை" யின் சார்பாக, நமது மாவட்ட சங்கம் நடத்திய, 12 வது ஆண்டு "தமிழ் விழா" துவங்கியது.  இவ்வாண்டு சிறப்புரை நிகழ்த்த வணக்கத்திற்குரிய புதுவை மாவட்ட நீதிபதி திரு.இராமபத்திரன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.


ஆண்டிற்கு ஆண்டு மெருகு கூடி வரும் இந்த விழாவிற்கு நமது அருமைத் தோழர் 'எஸ்ஸார்சி' அவர்கள் தலையேற்று கச்சிதமாக நடத்திக் கொடுத்தார். அறக்கட்டளையின் செயலர் தோழர் லோகனாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


'எஸ்ஸார்சி':


எப்பொழுதும் போல தோழர் 'எஸ்ஸார்சி' , கருத்துச் செறிவான தலைமையுரை நல்கினார்.


அவர் பேசும்பொழுது, மானுடம் பேசும் எழுத்துக்கள் மூலமும், தன்னல மற்ற தொழிற்சங்க பணியின் மூலமும், மனித நேயம் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்த,  தனது வாழ்வின் மூலமும், தொலைபேசி ஊழியர்கள் நினைவில் என்றும் வாழும் தோழர் சிரிலினை நினவு கூர்ந்தார்.  தோழர் சிரிலின் சிறுகதைகளான ''வேலைகொடு", "பாலம்", "சின்னச்சாமி" ஆகியவற்றை கோடிட்டு காட்டினார்.  அவர் இந்த மாவட்டத்தில் துவக்கி வைத்த தமிழ் பணியினை, மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தினார். 


சிறப்பு அழைப்பாளர் நீதிபதி "திரு.இராமபத்திரன்" அவர்களைப் பற்றி குறிப்பிடும் பொழுது நீதித்துறை தமிழுக்கு தந்துள்ள மேதைகளான 'மு.மு.இஸ்மாயில்', "கிருஷ்ணய்யர்" ஆகியோரை நினைவு கூர்ந்தார்.


தோழர் ரகு:


கடலூர் மாவட்ட சங்கத்தினை உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவரான  தோழர் ரகு தனது வாழ்த்துரையில், ஆரம்ப காலகட்டங்களில் தொழிற் சங்க கூட்டங்களும், இதழ்களும் 'ஆங்கிலத்திலேயே'  நடைபெற்றதையும், அதை தமிழுக்கு மாற்றுவதற்காக போராடிய தலைவர்களையும் போற்றினார்.


பரிசளிப்பு நிகழ்ச்சி:


பிளஸ் டூ தேர்வில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற குழந்தைகள் 
'கா. காயத்திரி', "தீ.சுஜீதா", பத்தாம் வகுப்பு தேர்வினில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற "ஜெ.சத்யவதனா", "பெ.நித்யா", மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற "ஜெ.விஷ்ணுப்பிரியா" ஆகியோருக்கு மாவட்ட பொது மேலாளர் திரு. மார்ஷல் ஆண்டனி லியோ அவர்கள் பரிசளித்து சான்றிதழ்களை அளித்தார்.


திரு. மார்ஷல் ஆண்டனி லியோ:


பரிசளித்து பேசிய பொது மேலாளர், பெண்குழந்தைகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது பற்றி பாராட்டினார். தமிழில் மதிப்பெண்கள் பெறுபவர்கள் மற்ற அனைத்து பாடங்களிலும் உயர் இடங்களை பெறுவது திண்ணம் என்றார்.


சிறப்புரை:


எப்பொழுதும் 'தமிழ் விழாவின்" பொழுது மழை,இடி, மின்னல் குறுக்கீடு செய்வது வழக்கம். இம்முறையும் அப்படி ஏதும் நடந்துவிடுமோ என பயந்தோம். மாறாக தென்றல் வீசியது.  இதமான சூழல் நிலவியது. வெளியில் மட்டுமல்ல!!  நீதிபதி இராமபத்திரன அவர்களின் "வல்லமை தாராயோ" என்ற தலைப்பில் அமைந்த சிறப்புரையிலும் தான். ஆர்பாட்டமின்றி, தெள்ளிய நீரோடை போல, அனைவரது மனதினையும் தொடும் வண்ணம், காலத்தின் தேவையை ஒட்டி, ஆற்றொழுக்காக அமைந்தது இவரது உரை.


'வல்லமை வேண்டும் தான்'.  ஆனால் எதற்கு எனவினவினார் நீதிபதி!
" யாவரும் ஒரேதரம்" என காண்பதற்கு வல்லமை வேண்டும் என்றார். மொழி,இன,பிராந்திய உணர்வுகளை மீறி பார்ப்பதற்கு வல்லமை வேண்டும் என்றார்.


"நல்ல எண்ணகளை வளர்த்துக் கொள்வதற்கு" வல்லமை வேண்டும் என்றார்.  மனதில் நல்ல எண்ணங்களை விதையுங்கள். பின் அது தலைமுறைக்கும் நல்ல அறுவடை கிடைக்கும். மனதினை சுத்த எண்ணங்களால் நிரப்புங்கள், எந்த இடத்திலும் எந்த சூழ் நிலையிலும் 'பாஸிட்டிவான' அணுகுமுறை தேவை என்றார். 'எதிர்மறை எண்ணங்கள்' எதிர்மறையான விளைவுகளையே கொணரும் என பல்வேறு புத்தகங்கள், மற்றும் பாரதி, பாரதிதாசன்,திருவள்ளுவர் உட்பட பல்வேறு கவிஞர் களிடமிருந்து மேற்கோள் காட்டினார். 


"அனைவரிடமும் அன்பு காட்டும் வல்லமை" வேண்டும் என்றார்.  தன்னம்பிக்கை கொள்ளும் வல்லமை வேண்டும். தாழ்வு மனப் பான்மையை விட்டொழிக்கச்சொன்னார்.  மனம் தான் மாயங்கள் செய்யும், எனவே மனதில் நல்லனவற்றைக் கொள்ளும் வல்லமையை பேணுங்கள். பின் எல்லாமே நல்லதாக இருக்கும் என்றார். 

ஆசைப்படுங்கள் (Aspire), 
ஆசை சரிதானா என ஆராயுங்கள் (Analyze),  
சரியென்றால் ஆசைப்பட்டதை அடையும் வரை செயல்படுங்கள் (Achieve)  
என்றார். 


நன்றி:


இறுதியில் தோழர் பி.சுப்ரமணியன் நன்றியுரை நவில, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
-0-
குறிப்பு:


1. விழா தொடர்பான புகைப் படங்கள் விரைவில்.


2. இதே வலைத்தளத்தில் முன்பு வெளியான  'தோழர் சிரில்' பற்றிய 
    கட்டுரையை      படிப்பதற்கு இங்கே     சொடுக்கவும்.


3. விழாவினை சிறப்பாக நடத்துவதற்கு உழைத்திட்ட,  அனைத்து   
    தோழர்கள், தோழியர்களுக்கும், பங்கு கொண்ட மாணவச் செல்வங் 
    களுக்கும், பொது மேலாளர்   மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும், 
    மற்றும் கலந்து கொண்ட அனைத்து தமிழ  ஆர்வலர்களுக்கும் நமது 
    நெஞ்சார்ந்த நன்றி!




Print Page

No comments:

Post a Comment