.

Friday, March 11, 2011

Tsunami In Japan




சான் பிரான்சிஸ்கோ: ஜப்பானில் உருவான சுனாமி அலைகள் சுமார் 7,500 கி.மீ. தூரம் பயணித்து அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியைத் தாக்கின. இதில் ஒருவர் பலியானார்.


சுமார் 2.4 மீட்டர் உயரம் கொண்ட அலைகள் கலிபோர்னியா மற்றும் ஓரேகோன் பகுதிகளைத் தாக்கின. இதில் சாண்டா க்ரூஸ் உள்ளிட்ட பல துறைமுகங்கள் சேதமடைந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தன.

கலிபோர்னியாவில் டெல் நோர்டே கவுன்டியில் க்ளாமத் ஆறு கடலில் கடக்கும் இடத்தில் சுனாமி அலைகள் தாக்கியதில் 25 வயதான வாலிபர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பலியானார்.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஹவாயிலும் சுனாமி அலை:

ஜப்பானில் பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பசிபிக் கடல் பகுதியையொட்டிய ரஷ்யா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, மெக்சிகோ, கவுதமலா, எல்சால்வடார், கோஸ்டாரிகா, பனமா, சிலி உள்பட 50 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஹவாய் தீவுகளிலும் சுனாமி அலை தாக்கியது. ஆனால் அவை உயரம் குறைவாக இருந்ததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

அதே போல அமெரிக்காவின் நார்த் கரோலினாவிலும் சுனாமி பீதி நிலவியது. ஆனால், அந்தப் பகுதியை அலைகள் அடையவில்லை.



==============================================


டோக்கியோ: ஜப்பான் நாட்டின் வட கிழக்குப் பகுதியை இன்று மிக பயங்கரமான பூகம்பம் தாக்கியது. இதையடுத்து உருவான சுனாமி பேரலைகள் ஊர்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.




லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வீடுகளும் லட்சக்கணக்கான வாகனங்களும் அடுத்தடுத்து வரும் சுனாமி அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டுள்ளன.


ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள ஒனஹாமா மாகாணத்தில் மியாகி என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 30 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.


ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து
மியாகி கடலோரப் பகுதி உள்பட ஜப்பானின் பெரும்பாலான கடரோலப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


இதையடுத்து பெரும்பாலான கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் 13 அடி உயரமுள்ள மிக பயங்கர அலைகள் கடலோரப் பகுதிகளில் புகுந்தன.


தப்பியோடக் கூட முடியாத அளவுக்கு கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் அடுத்தடுத்துத் தாக்கி ஊர்களுக்குள் புகுந்து வீடுகளை தரைமட்டமாக்கின. வீடுகளின் இடிபாடுகளையும் லட்சக்கணக்கான வாகனங்களையும் அந்த அலைகள் அடித்துக் கொண்டு சென்றன.


தொடர்ந்து பயங்கர அலைகள் அடுத்தடுத்து வந்து தாக்கிக் கொண்டுள்ளன. இதில் கடலிலிருந்து ஏராளமான கப்பல்கள், படகுகளும் நிலப் பகுதிகளுக்குள் அடித்து வரப்பட்டன.


முன்னதாக இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ உள்பட ஜப்பானின் பெரும்பாலான பகுதிகளில் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதையடுத்து கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கி யது .


மேலும் அலைகள் ஊருகளுக்குள் புகுந்தபோது பல எரிவாயு குழாய்கள் உடைந்து தீப் பிடித்துக் கொண்டு ஆங்காங்கே பயங்கர வெடி விபத்துகளும் ஏற்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து 400 கி.மீ. தூரத்திலும் கூட எரிவாயுக் குழாய்கள் சேதமடைந்து வெடி விபத்துகள் ஏற்பட்டு தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.


இந்த நிலநடுக்கத்தையடுத்து ஜப்பானின் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஜப்பானை நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களும் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. நாடு முழுவதும் ரயில்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.


சென்டெய் நகர் உள்பட வடக்கு ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. சென்டாய் நகர விமான நிலையம் அழிந்தே போய்விட்டது.


இந்த பூகம்பம் மற்றும் சுனாமி அலைகளால் இதுவரை 88 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பெருமளவில் உயிரிழப்புகளும் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.


நிவாரணப் பணியில் முப்படையினரும் இறக்கிவிடப்பட்டுள்ளனர். டோக்கியோவில் நாடாளுமன்றமும் பயங்கரமாக குலுங்கியதையடுத்து அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

ஜப்பானின் 5 அணு மின் நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.


ஜப்பானைத் தொடர்ந்து ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஹவாய் தீவுகள், தைவான், மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய கடரோலப் பகுதிகளை சுனாமி தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 கிழே கொடுக்கப்பட்ட லிங்க் சொடுக்கவும்


http://www.youtube.com/watch?v=e-A0NDsPcZY

No comments:

Post a Comment